Saturday, November 8, 2008

காற்றில் மிதந்தவை

மலரும் மங்கையும்..

பூவே, அழகு உன் புன்னகை
நீ பூச்செடியிலிருந்தால்
மலரே, மணமன்றோ அக்காற்று
நீ மலரும் அத்தருணத்தில்
பூவும் மலரும் அக் கார்குழலில்
அழகன்றோ அவள் பாரினில்

=====++====

பாலையில் பணம்


காணாமல் போனதே
அம் மாலைப் பொழுது
காணாமல் போனதே
அந் நறுமணக்காற்று
காணாமல் போனதே
அக் குறும்பு பார்வை
கடல் கடந்து வந்தேனே
திரவியம் தேட
எங்கும் மணல் தானோ
மணலும் பணம் தானோ
விரகம் இது தானோ
விரதமும் இது தானோ
----------------------


பொக்கை வாய் சின்ன பாட்டி


முத்துப் பல் சிரிப்பு
தத்து பித்து பேச்சு
காணாமல் போச்சு
அம் மழலை பேச்சு
பாப்பா பெருசாச்சு
பல் விழுந்து போச்சு
பொக்கைப் பல் பாட்டி
எங்கே அந்தப் பல் போச்சு

Friday, October 17, 2008

பெண் சிசு கொலை

யானறியேன் இரவு பகல்யாதென்று
அறிவேன் அவ்வன்பும் கதகதப்பும்
யானறியேன் என்னாள் வரை இவ்வுலகம்
அறிவேன் இது சிறுகாலம்தான்
யானறியேன் நான் ஆணா பெண்ணா
அறிவேன் என்னுள் மாறுதலை
யானறியேன் மறு சென்மம் செவி சாய்த்ததில்
அறிந்தேன் நேரிடலாம் மறு சென்ம மெடுக்க

இன்புற்றேன் பூக்கரமொன்று வருடுவதை மறுகணம்
உணர்ந்தேன் ஒருவித நடுக்கத்தை
இன்பமும் துன்பமும் கலந்த்தோ எதிர்காலம் எனில்
இவ்வறையன்றோ சொர்க்கலோகம்
போதுமென்றது என் வளர்ச்சியை இயற்கை
வெளி வந்தேன் அன்னையின் அலறலுடன்

கூசியது கண் அலறினேன் நான்
அரற்றினாள் மருத்துவச்சி ஐயோ பெண் குழந்தை
கதறினாள் அன்னை கதறுவான் அப்பன்
கதறுவாளா என்னைக் கொல்லவரும் அச்சென்மம்
மறந்துவிட்டாளே அவள் பெண்ணென்பதை.
யானறியேன் மாய்க்கச் சொன்னது யாரென்று
அறிந்தேன் பிறவியில் சிறந்தது மானிடமல்லவென்று.

Friday, September 19, 2008

கண்டதும் கேட்டதும்

44 டிகிரி வெயிலிலும் நண்பர்களையும் ஊர்க்காரர்களையும் பார்க்கும் தருணத்தில் சூடு தெரிவதில்லை ( சட்டையை கழற்றி நிற்பவரை காண்க).
இது துபாய் என்னும் கனவுலகின் மறு பக்கம். இந்த படமெடுத்தது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். சரவணபவனில் உணவு உண்டு வெளியே வந்தவுடன்
இந்த கூட்டத்தை படம் பிடித்தால் என்ன என்று தோன்றவே உடனே வீட்டிற்கு சென்று காமெராவைத்தூக்கிக்கொண்டு அலைந்தேன். சிலவற்றை
வெட்டி ஒருங்கிணைத்ததுதான் இந்த போட்டோ.

என்னா..... நல்லா இருக்கியா... பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.. அம்மா... அப்பா.. உன் வூட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? பணம்
அனுப்னேனே கெடச்சிதா? அங்கிருந்து சிரிப்பொலியுடன் கூடிய பதில் வரும், இவன் முகத்திலும் சிரிப்பு. (அத)செய்யச்சொன்னேனே என்னாச்சி ? அங்க போய் (அத) பாத்துட்டு வர சொன்னேனே பாத்தியா? என்னா இவ்ளோ செலவு, ஒரு கணக்கு வழக்கே கெடையாதா ? சிரிப்பொலி மறைந்து உம் உம் மட்டுந்தான் கேட்கும் அந்த பக்கத்திலிருந்து. இது நான் துபாயில் வெள்ளிக்கிழமைகளில் அதிலும் மாத ஆரம்பத்தில் தெருவில் நடந்து செல்லும்பொழுது வழக்கமாக என் காதில் விழும் வார்த்தைகள். அடிக்கடி இது முற்றிப்போய் செல் போனில் தாம் இருப்பது தெருவென்றறியாது வசை பாடிக்கொண்டிருப்பர். ஏன் இப்படி என நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
உன்னைத்தவிர உன் குடும்ப பாரங்கள அத்தனையும் சுமந்து, நீ இல்லாத ஓரிடத்தில் அதுவும் நீ இல்லையென்பதை ஊரே தெரிந்த இடத்தில் அவள் தனியாக போராடிக்கொண்டிருப்பது உனக்கேன் புரியவில்லை? நீ இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முயலும் கழுகுக் கண்களிடையே தன் மானத்தையும் உன் குலப்பெயரையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அந்த உயிரிடம் பேசும் விதமா இது?
இவன் விடுப்புக்கு தாயகம் சென்றவுடன் தன் குழந்தையே தன்னருகில் வராதபொழுது ( சில சமயம் அங்கிள்- மாமா என அழைக்கப்பட்ட கதையும் உண்டு) இது உன் அப்பாடா செல்லம் பயப்படாதே, இங்க பாரு... அப்பா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு! என இவன் குழந்தையை இவனுக்கே அறிமுகம் செய்து ஒரு வழியாக இவனுடன் ஒட்டவைக்கிறாள். நாட்கள் நகர்ந்து மறுபடியும் விமானமேறி இங்கு வந்த அடுத்த மாதம் என்னடீ.. அறிவு கெட்டவளே.... வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்ளும்.
பாறாங்கல் நெஞ்சே... உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன் பாதியை நீ அறிந்து கொள்வது எப்பொழுது? பண்பான வார்த்தைகளுடன் பாசத்தைப் பொழிந்து பார். கிழவனாக நீ முதிரும்பொழுது உன் பிள்ளைகள் திரும்பப்பொழியும் நீ பொழிந்ததை.
இனி மேலாவது வெள்ளிக்கிழமைகளில் அவளும் குழந்தைகளும் உன் பேச்சைக்கேட்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கையில் வசவு பாடாதே.

முகப்பு

மண் வாசனை இன்னும் மறக்கவில்லை. ஊர் வாசனையும் கூட. அலைந்து திரிந்து வாழும் வாழ்கையில் கண்டது கேட்டது எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள ஓரு வடிகால் வேண்டும் அது தான் இது