யானறியேன் இரவு பகல்யாதென்று
அறிவேன் அவ்வன்பும் கதகதப்பும்
யானறியேன் என்னாள் வரை இவ்வுலகம்
அறிவேன் இது சிறுகாலம்தான்
யானறியேன் நான் ஆணா பெண்ணா
அறிவேன் என்னுள் மாறுதலை
யானறியேன் மறு சென்மம் செவி சாய்த்ததில்
அறிந்தேன் நேரிடலாம் மறு சென்ம மெடுக்க
இன்புற்றேன் பூக்கரமொன்று வருடுவதை மறுகணம்
உணர்ந்தேன் ஒருவித நடுக்கத்தை
இன்பமும் துன்பமும் கலந்த்தோ எதிர்காலம் எனில்
இவ்வறையன்றோ சொர்க்கலோகம்
போதுமென்றது என் வளர்ச்சியை இயற்கை
வெளி வந்தேன் அன்னையின் அலறலுடன்
கூசியது கண் அலறினேன் நான்
அரற்றினாள் மருத்துவச்சி ஐயோ பெண் குழந்தை
கதறினாள் அன்னை கதறுவான் அப்பன்
கதறுவாளா என்னைக் கொல்லவரும் அச்சென்மம்
மறந்துவிட்டாளே அவள் பெண்ணென்பதை.
யானறியேன் மாய்க்கச் சொன்னது யாரென்று
அறிந்தேன் பிறவியில் சிறந்தது மானிடமல்லவென்று.
Friday, October 17, 2008
Subscribe to:
Posts (Atom)